Thursday, October 3, 2013

இப்படியும் தலைவர்கள் வாழ்ந்தார்கள்!

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ - அதில் கலந்து கொள்ளும் மக்கள், தொண்டர்கள் காலணா அரையணா, ஒரு அணா என்று நன்கொடையாக கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக் கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். 

நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. "அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்" என்றார். " சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்து வந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா?" என்று கேட்டார் கஸ்தூரி ரங்கன். "அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, "எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். 

பிறகு காமராஜர் வேண்டிக் கொண்டது போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்ல படியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது "ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்" என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் "அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்" என்று கூறியவர், "ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்" என்றார். 

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசி முடித்தார். பத்திர பதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். "யார் பெயரில் பத்திரப் பதிவு?" என்று கேட்டார் காமராஜர். "உம் பெயரில்தான்" என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் "எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம்" என்றார். 

எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள "தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்". கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். இப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த நம் தமிழ்நாடு, இந்தியா இன்று உள்ள நிலைமையை நினைத்தாலே நெஞ்சம் குமுறுகிறது.

கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து எனது facebook பக்கமான gatewaytoleisure க்கு சென்று, நல்ல சிந்தனைகள் என்ற பதிவுகளைப் பாருங்கள்/ பகிருங்கள்.
https://www.facebook.com/media/set/?set=a.179166298842160.43450.174514152640708&type=3
உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து https://www.facebook.com/GatewayToLeisure  "LIKE" ஐ கிளிக் செய்யுங்கள். எனது பகிர்வுகள் உங்களுக்கு உடனுக்குடன் வரும்.

1 comment:

  1. காமராசர் பற்றிய பதிவு நெகிழ வைக்கிறது.

    ReplyDelete