Friday, September 21, 2012

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!

தொன்று தொட்டு தமிழ் கலாச்சார முறைப்படி பெரியவர்கள், சிறியவர்களை வாழ்த்தும் பொழுது "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!" என்று வாழ்த்துவார்கள். நல் வாழ்வு வாழ தேவையான பதினாறு இவையே: கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன் மக்கள், நல் ஒழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி.
அபிராமி அந்தாதியின் முதல் பாடலில் இப்பதினாறு செல்வங்களும் "உன் தொண்டர்களுக்கு அருள வேண்டும்" என்று அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கவடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாதசந் தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
பொருள்: கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.

இப்பாடலை தினமும் ஒரு முறையாவது முழு மனதுடன் அன்னை அபிராமியை நினைத்துப் பாடி பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக!

No comments:

Post a Comment