Wednesday, September 5, 2012

நான் உன் அடிமை இல்லை!

கெளதமபுத்தர் ஒரு ஊரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் எச்சிலை துப்பினான். தன் மேல் இருந்த எச்சிலை துண்டால் துடைத்து விட்டு, "இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் புத்தர். அருகில் நின்ற புத்தரின் பிரதம சிஷ்யனான ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்!" என்றார். அவன் எழுந்து கேட்டான் - "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தை கூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார், "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா?"

No comments:

Post a Comment