Saturday, September 15, 2012

வியாபாரத் தந்திரம்!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன் வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொ
ரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!


மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

Wednesday, September 5, 2012

நான் உன் அடிமை இல்லை!

கெளதமபுத்தர் ஒரு ஊரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் எச்சிலை துப்பினான். தன் மேல் இருந்த எச்சிலை துண்டால் துடைத்து விட்டு, "இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?" என்றார் புத்தர். அருகில் நின்ற புத்தரின் பிரதம சிஷ்யனான ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார், "ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்!" என்றார். அவன் எழுந்து கேட்டான் - "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தை கூட ஏசவில்லை?" என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார், "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா?"

Tuesday, August 28, 2012

மிருக வைத்தியர்

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான்.   பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள்,   "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.
 
என்னது மிருக டாக்டர்கிட்டேயா
? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரிலபக் லபக்னு ரெண்டு வாய் தின்னுட்டு , பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
 
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க
! உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க!   வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே   நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டைசரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!   இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க,   மனைவி சொன்னள்   ` கோட்டான் மாதிரி முழிக்காதீங்க '

Saturday, August 11, 2012

அறிவின் முதிர்ச்சி


ஒரு சமயம்  விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அப்போது அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் ஒரு அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.


அவள் விவேகானந்தரிடம், "நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா?" என்று கேட்டாள்.

"என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது?" என்று கேட்டார் ஸ்வாமிஜி .

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே, "என்னை மணந்து என்னைப் போலவே மகனை பெற்றுக் கொள்வதை விட என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன். இன்று முதல் நன் உன்னை தாயே!என்றே அழைக்கிறேன்" என்று.

இதுதான் அறிவின் முதிர்ச்சி.

ஒருவரது கருத்தை மறுக்கும் பொழுதுகூட, அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....

Saturday, July 28, 2012

மனதின் சுமைகள்

ரு மனோதத்துவ வகுப்பில் ஒரு பேராசிரியர் ஒரு தம்ளரில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கையில் ஏந்தியபடி மாணவர்களிடம் கேட்டார். “இந்தத் தம்ளர் எவ்வளவு கனம் இருக்கும்?

மாணவர்கள் பக்கத்தில் இருந்து பல உத்தேச பதில்கள் வந்தன. ஐம்பது கிராம்... எழுபது கிராம்.... நூறு கிராம்.... நூற்றி இருபது கிராம்....

பேராசிரியர் சொன்னார். “இதை எடை போட்டால் தான் உண்மையான எடை நமக்குத் தெரியும். ஆனால் இது ஒருவரால் மிக சுலபமாக சுமக்கும் கனம் தான், இல்லையா?

“ஆமாம்என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

பேராசிரியர் கேட்டார். “இதை நான் சில நிமிடங்கள் கையில் ஏந்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?

ஒன்றும் ஆகாது மறுபடி ஒருமித்த குரலில் பதில் வந்தது.

இதை நான் ஒரு மணி நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்

“கை வலிக்கும்என்று ஒரு மாணவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“உண்மை தான். சரி, நான் இதை ஒரு நாள் முழுவதும் இப்படியே பிடித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்

தாங்க முடியாத வலி ஏற்படும்,  “கை தசைகள் இறுகி கையை நகர்த்த முடியாமல் போய் விடும்”,  ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டி வரும்
என்று பதில்கள் வந்தன.

அந்தப் பிரச்சினை ஏற்படுவது தம்ளரின் கனம் கூடுவதாலா?

“இல்லை நீங்கள் தொடர்ந்து அதை பிடித்துக் கொண்டிருப்பதால் தான்

இந்தப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மாணவன் சுலபமாகச் சொன்னான். “அந்தத் தம்ளரை கீழே வைத்தால் போதும்

பேராசிரியர் சொன்னார். “மிகவும் உண்மை. ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு எடையைக் கூட தொடர்ந்து நிறைய நேரம் கையில் ஏந்திக் கொண்டே இருந்தால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வல்லது. வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளும் அப்படித்தான். அவற்றை உங்கள் மனதில் சிறிது நேரம் வைத்திருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் அவற்றை நிறைய நேரம் சுமக்க ஆரம்பித்தால் சின்னப் பிரச்சினை கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தி விடும். அதையே நாள் கணக்கில் சுமக்க ஆரம்பித்தால் அது உங்களை வாழ்க்கையையே ஸ்தம்பிக்க வைத்து விடும். அதனால் எந்த சுமையையும் இரவு தூங்கப் போகும் முன் கீழே இறக்கி வைத்து விட்டு உறங்கச் செல்லக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை எளிதாக இருக்கும். மறு நாளைய பிரச்சினைகளைச் சமாளிப்பது சுலபமாகும்

மிக அழகான ஒரு உவமை இது. நமக்கு மனதில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகத் தெரிகிறதே ஒழிய இறக்கி வைக்கத் தெரிவதில்லை. சுமைகள் கூடிக் கொண்டே போகும் தான் நம்மால் புதியதாக சின்னப் பிரச்சினை வந்தால் கூட அதை சமாளிக்கத் தெரிவதில்லை. ஐயோ இதுவுமாஎன்று மலைத்துப் போய் விடுகிறோம். ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்துப் பார்த்தால் அதை சமாளிப்பது சுலபமாக இருக்கும். பெரும்பாலானவை தனித்தனியாக அணுகும் போது அப்படி சமாளிக்க முடிந்தவையே. ஆனால் பிரச்சினைகளை சேர்த்து வைத்துக் கொண்டே சுமந்து நின்றால் அதன் பின் கூடும் எல்லாச் சின்னப் பிரச்சினைகளும் தாங்க முடியாதவையாக மாறி விடுகின்றன.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சுமந்து கொண்டே இருப்பதால் கனம் கூடுமே ஒழிய குறையாது. இறக்கி வைத்தால் மட்டுமே கனம் குறையும். எனவே அவ்வப்போது மனதின் சுமைகளை இறக்கி வைக்கப் பழகிக் கொள்ளுங்கள். புதிதாக வருவதை சமாளிப்பது சுலபமாகும். வாழ்வின் இனிமைகளை ரசிக்க மனதில் இடம் பாக்கி இருக்கும்!

Friday, June 22, 2012

வேதாத்திரி மகரிஷி

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி பேசிக் கொண்டிருந்தார்.

அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி
மகரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்
கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

Wednesday, May 16, 2012

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!


கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.


இவரைப் போன்ற அரசியல் தலைவர்களை என்றுதான் பார்ப்போமோ?